Appam, Appam - Tamil

ஆகஸ்டு 25 – அன்றன்றுள்ள ஆகாரம்!

“எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்றும் எங்களுக்குத் தாரும் (லூக். 11:3).

“அன்றன்றுள்ள அப்பம்” என்னும் வார்த்தை வெறும் உணவை மட்டும் குறிப்பிடவில்லை. உலக வாழ்க்கைக்குரிய தேவைகள் அனைத்தையுமே, “அன்றன்றுள்ள அப்பம்” என்றுதான் வேதம் குறிப்பிடுகிறது. எல்லா நல்ல ஈவுகளையும் கொடுக்க அறிந்திருக்கிற பரமபிதாவின் பாதத்தண்டை ஒருவன் அதிகாலை வேளையிலே ஓடி வரவேண்டியது மிகவும் அவசியம்.

இயேசு சொன்னார், “என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் …. ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?” (மத். 6:25,26).

அன்றன்றுள்ள அப்பத்தை தினமும் பெற்றுக்கொள்வதற்கு என்ன வழி? முதலாவது, தேவனுடைய ராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேடும்போது, உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களெல்லாம் கர்த்தர் நிச்சயமாகவே கூட்டிக்கொடுப்பார் (மத். 6:33). இரண்டாவது, கர்த்தர் உங்களுக்கு கொடுப்பார் என்பதிலே எந்த சந்தேகமும் இல்லாமல் விசுவாசித்தால் அவைகளைப் பெற்றுக்கொள்வீர்கள்.

“என் ஜனங்களுக்கு ஆன்மீக உணவைக் கொடுக்கவேண்டும்” என்று என்னுடைய தகப்பனார் உள்ளத்தில் கர்த்தர் உணர்த்தினபடியால் 1982-ம் ஆண்டு அன்றன்றுள்ள அப்பம் என்ற பெயரில் ஒரு தின தியான மாதாந்தர இதழை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் நானூறு பிரதிகள் மட்டுமே அச்சிடப்பட்டன. தற்போது ஏறக்குறைய நாற்பத்திநான்கு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இன்று ஆயிரக்கணக்கான இதழ்கள் உலகமெங்கும் பரவலாய் வாழும் தமிழ் மக்களுக்குச் செல்லுகின்றன. வேதத்தை தியானிக்க, வேதத்தின் மறைபொருளை அறிந்துகொள்ள, வாக்குத்தத்தங்களைப் பெற்றுக்கொள்ள இந்த தினசரி தியான நூல் பயனுள்ளதாய் அமையும்படி கர்த்தர் ஆசீர்வதித்திருக்கிறார். வேதம் சொல்லுகிறது, “மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” (மத். 4:4).

“கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. அவைகள் பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது” (சங். 19:7,10).

தேவபிள்ளைகளே, கர்த்தருடைய வார்த்தையை பரலோக மன்னாவாக எண்ணி வாஞ்சையோடு வாசியுங்கள். வாக்குத்தத்தங்களை உரிமை பாராட்டி சுதந்தரித்துக்கொள்ளுங்கள். அவைகள் உங்களுக்காகவே அன்புள்ள பரமபிதாவானவரால் அருளிச்செய்யப்பட்டவை.

நினைவிற்கு:- “சகல துர்க்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிட்டு, நீங்கள் வளரும்படி புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்” (1 பேது. 2:2,3).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.