Appam, Appam - Tamil

மே 27 – தெரிந்துகொள்!

“மூன்று காரியங்களை உனக்கு முன்பாக வைக்கிறேன்; அவைகளில் ஒரு காரியத்தைத் தெரிந்துகொள், அதை நான் உனக்குச் செய்வேன் (2 சாமு. 24:12).

ஒரு காரியத்தைத் தெரிந்துகொள் என்று கர்த்தர் சொல்லுகிறார். பல காரியங்கள் நமக்கு முன்பாக வைக்கப்படலாம். பல பிரச்சனைகளும், போராட்டங்களும்கூட வைக்கப்படலாம். பல கண்ணிகளும், வலைகளும்கூட வைக்கப்படலாம். ஆனால் நீங்கள் எதைத் தெரிந்துகொள்ளப்போகிறீர்கள்? கர்த்தர் அன்போடு நம்முடைய அருகிலே வந்து ஒரு காரியத்தைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்றும் அதை உனக்குச் செய்வேன் என்றும் சொல்லுகிறார். ஆகவே நாம் குழப்பமடையத் தேவையில்லை. மனம் கலங்கவேண்டிய அவசியமில்லை. இன்று நீங்கள் எதைத் தெரிந்துகொள்ளப்போகிறீர்கள்?

கர்மேல் பர்வதத்தின்மேல் நின்று, எலியா இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து, “பாகாலைத் தெரிந்துகொள்ளப்போகிறீர்களா? அல்லது ஜீவனுள்ள தேவனாகிய கர்த்தரைத் தெரிந்துகொள்ளப்போகிறீர்களா?” என்று முழங்கினார். ஜனங்கள் பதில் சொல்லவில்லை. கானானைச் சுதந்தரித்தபின்பு யோசுவா சகல இஸ்ரவேல் ஜனங்களையும் பார்த்து, “யாரை சேவிக்கப்போகிறீர்கள்? நதிக்கு அப்புறத்திலுள்ள விக்கிரக தேவர்களையா அல்லது கர்த்தரையா?” என்று கேட்டார். ஒன்றைத்தெரிந்துகொள்ளுங்கள் என்று சொல்லிய யோசுவா அதைத் தெரிந்துகொண்டவராய், “நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்” (யோசு. 24:15) என்று சொன்னார்.

தாவீது ஒன்றைத் தெரிந்துகொண்டார். “கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்” (சங். 27:4) என்றார். மார்த்தாள் அதைத் தெரிந்து கொள்ளவில்லை. உலக வேலைகளினாலும், கவலைகளினாலும் முறுமுறுத்து குறைசொல்லிக்கொண்டிருந்தாள். ஆனால் மரியாளோ, அந்த ஒன்றைத் தெரிந்துகொண்டாள். அது தன்னைவிட்டு எடுபடாத நல்ல பங்காயிருந்தது.

அப். பவுல் அதைத் தெரிந்துகொண்டார். “ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்” (பிலி. 3:13,14) என்று சொல்லி அந்த இலக்காகிய கிறிஸ்துவை நோக்கி ஓடி ஜெயம்கொண்டார்.

ஒரு நாள் கர்த்தர் சாலொமோனுக்கு தரிசனமாகி, நீ விரும்புகிறது என்ன? என்னிடத்தில் கேள் (1 இரா. 3:5) என்றார். சாலொமோன் தன்னைத் தாழ்த்தி, “தேவனே உம்முடைய ஜனங்களை நியாயம் விசாரிப்பதற்கு ஞானம் உள்ள இருதயம் தாரும்” என்று கேட்டார். அந்தத் தாழ்மை கர்த்தருடைய பார்வையில் மன மகிழ்ச்சியாய் இருந்தது.

‘எஸ்தர் ராஜாத்தியே, உனக்கு என்ன வேண்டும்? நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்யத்தில் பாதி கேட்டாலும் அது உனக்கு கொடுக்கப்படும்’ (எஸ்தர் 5:3) என்று ஆகஸ்வேரு இராஜா கேட்டார். எஸ்தர் கேட்ட அந்த ஒன்று யூதரையெல்லாம் அழிவிலிருந்து பாதுகாத்தது. துக்கம் சந்தோஷமாய் மாறினது. தேவபிள்ளைகளே, ஒரு காரியத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். கர்த்தர் அதை உங்களுக்குச் செய்வார்.

நினைவிற்கு:- “சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக” (1 சாமு. 1:17).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.