பெப்ருவரி 28 – விசுவாசமாயிருக்கும்படி!
“ஆண்டவரே, அவரிடத்தில் நான் விசுவாசமாயிருக்கும்படிக்கு அவர் யார் என்றான்” (யோவா. 9:36).
யோவான் 9-ம் அதிகாரத்தில் ஒரு பிறவிக்குருடனைக் காண்கிறோம். இயேசுவும், அவருடைய சீஷர்களும் அவனைக் கண்டதுமுதல் ஏராளமான கேள்விகள் அவனைச் சூழ்ந்துகொண்டன. புதிய ஏற்பாடு முழுவதும் கேள்விகளாக இருக்கும் 486 வசனங்களில், பதினைந்து கேள்விகள் தனி மனிதனாகிய இவனைச் சுற்றியிருக்கின்றன.
முதலாவது, கிறிஸ்துவினுடய சீஷர்கள் அவனைப் பற்றி இயேசுகிறிஸ்துவிடம், “ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம்? இவன் செய்த பாவமோ? இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ? என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, “அது இவன் செய்த பாவமுமல்ல; இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல; தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டு இப்படிப் பிறந்தான்” (யோவா. 9:3) என்று சொன்னார்.
அதின் பின்பு இயேசு, தரையிலே துப்பி, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி, அந்தச் சேற்றைக் குருடனுடைய கண்களில் பூசி, ‘நீ போய் சீலோவாம் குளத்திலே கழுவு’ என்றார். அப்படியே கழுவி அவன் பார்வையடைந்தான். அதன்பின்பு அவனுடைய அயலகத்தார் கேள்விகளைத் தொடர்ந்தார்கள். ‘நீ உட்கார்ந்து பிச்சைக் கேட்டுக்கொண்டிருந்தவன் அல்லவா? உன் கண்கள் எப்படி திறக்கப்பட்டன?’ என்று கேட்டார்கள். அதற்கு அவன் ‘இயேசு என்னப்பட்ட ஒருவர் சேறுண்டாக்கி, என் கண்களின்மேல் பூசி, நீ போய் சீலோவாம் குளத்தில் கழுவு என்றார். அப்படியே நான் போய் கழுவி பார்வையடைந்தேன்’ என்றான்.
பரிசேயர்கள் அவனை நோக்கி, ‘நீ எப்படி பார்வையடைந்தாய்?’ என்று கேட்டார்கள். அவன் தான் சுகமான விதத்தை விவரித்தான். மறுபடியும் அவர்கள், ‘உன் கண்களை திறந்தாரே, அவரை குறித்து நீ என்ன சொல்லுகிறாய்’ என்று கேட்டார்கள். அதற்கு அவன், அவர் தீர்க்கதரிசி என்றான் (யோவா. 9:17). பின்பு பரிசேயர், அவனது பெற்றோரைப் பார்த்து, “உங்கள் குமாரன் குருடனாய்ப் பிறந்தான் என்று சொல்லுகிறீர்களே, அவன் இவன்தானா? இவனானால் இப்பொழுது இவன் எப்படிப் பார்வையடைந்தான்” என்று கேட்டார்கள் (யோவா. 9:19).
குருடனுக்கு பார்வையளிக்க சக்தியில்லாதவர்கள், பார்வையடைந்ததைக்குறித்து மகிழ்ச்சியோடு தேவனை மகிமைப்படுத்த விரும்பாதவர்கள் கேட்கும் கேள்விகளினால் என்ன பயன்? பார்வையடைந்த அந்த மனுஷனை, பரிசேயர் புறம்பே தள்ளிவிட்டதை இயேசு அறிந்து, அவனிடத்தில், ‘நீ தேவகுமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறாயா?’ என்றார். அப்போது அந்த மனுஷனின் உள்ளம் எவ்வளவாய் உருகியிருக்கும்!
அதற்கு அவன்: ஆண்டவரே, அவரிடத்தில் நான் விசுவாசமாயிருக்கும்படிக்கு அவர் யார் என்றான். இயேசு அவனை நோக்கி: நீ அவரைக் கண்டிருக்கிறாய், உன்னுடனே பேசுகிறவர் அவர்தான் என்றார். உடனே அவன் அவரைப் பணிந்துகொண்டான் (யோவா. 9:36-38).
தேவபிள்ளைகளே, பிறவிக் குருடனுக்கு அற்புதத்தைச் செய்து பார்வையைத் தந்தவர் உங்களுக்கும் அற்புதத்தைச் செய்ய வல்லமையுள்ளவராய் இருக்கிறார். அவர் பட்சபாதமுள்ள தேவன் அல்ல என்று வேதம் சொல்லுகிறது. “அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே. ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்” (அப். 17:27,28).
நினைவிற்கு:- “காணாதவர்கள் காணும்படியாகவும், காண்கிறவர்கள் குருடராகும்படியாகவும், நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன்” (யோவா. 9:39).