ஆகஸ்ட் 04 – தேவ பயமும், பரிசுத்தமும்!
“பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களும்…” (யூதா 1 :1).
பிதாவாகிய தேவன் நம்மைப் பரிசுத்தமாக்குகிறவர். பிதாவாகிய தேவனைக் குறித்து எண்ணும்போதெல்லாம், அவருடைய கண்டிப்பும், அவருடைய கட்டளைகளும் நம் உள்ளத்தைத் தொடுகின்றன. ஆம், அவர் அசுத்தத்தை வெறுத்து, பரிசுத்தத்தில் வைராக்கியமாய் இருக்கிற தேவன்.
நீங்கள் பிதாவாகிய தேவனோடு நெருங்கி பழகிப்பாருங்கள். பரிசுத்தத்தைக் குறித்த பயம் உங்களுக்கு தானாகவே ஏற்படும். அவர் மிகவும் கண்டிப்புள்ளவர். அனலுமில்லாமல், குளிருமில்லாமல் இருந்தால் வாயிலிருந்து வாந்திப் பண்ணிப் போடுவார். அவர் “பாவிகளின் மேல் நித்தமும் சினங்கொள்ளுகிற தேவன்” என்று வேதம் சொல்லுகிறது.
அசுத்தத்தையும், அருவருப்பையும் நடப்பித்து, மனம்போல இச்சைகளில் வாழ்ந்துவிட்டு பிதாவின் சந்நிதியிலே வந்து நிற்பவர்களை அவர் அருவருத்துத் தள்ளுவார். ‘அக்கிரம செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள்’ என்று கடிந்துகொள்ளுவார். ஆம், அவர் பட்சிக்கிற அக்கினியாய் இருக்கிறார்.
பிதாவாகிய தேவனுடைய பரிசுத்தத்தைக் குறித்து எண்ணும்போதெல்லாம் உங்களுக்குள் தேவபயம் வரவேண்டும். அவர் பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவர், பரிசுத்தத்தில் பயங்கரமானவர். மோசே இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து, “நீங்கள் பாவம் செய்யாதபடிக்கு தம்மைப் பற்றும் பயம் உங்கள் முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும் தேவன் எழுந்தருளினார்” என்றார் (யாத். 20:20).
இன்றைக்கு விசுவாசிகளில் பலர் பாவம் செய்கிறவர்களாய் இருப்பதற்கு அவர்களுக்குள்ளே தேவபயம் குறைந்து விட்டதே காரணம். பிதாவின் பரிசுத்தத்தைக் குறித்து அறிகிற அறிவு அவர்களுக்கு இல்லை. அவருடைய சமுகத்திலே போய் நிற்க வேண்டுமே என்கிற தரிசனம் அவர்களுடைய கண்களுக்கு இல்லை. தேவபயம் குறைய குறைய பாவமும், இச்சைகளும் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் பிரவேசித்து அவனை ஆண்டு கொள்ளுகின்றன.
நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு பிதாவாகிய தேவனோடு நெருங்கி ஜீவிக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு தேவபயம் உங்களுக்குள் கடந்து வரும். யோசேப்பினால் ஏன் பாவம் செய்ய முடியவில்லை? தேவபயம் அவருக்குள் இருந்ததினால்தான், அந்த தேவ பயம் அவரைக் காத்துக் கொண்டது. “நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி?” (ஆதி. 39:9) என்று யோசேப்பு சொன்னார்.
‘பரிசுத்தமுள்ள தேவன் என்னைக் காண்கிறாரே அசுத்தமான இச்சைகளோடு நான் எப்படி வாழ முடியும், தேவனுடைய கோபத்திற்கு நான் எப்படி ஆளாக முடியும், அவர் என்னைப் புறக்கணித்து தன் சமுகத்தைவிட்டு துரத்திவிட்டால் என் நிலைமை என்னவாகும் என்று எண்ணிப் பார்க்கிற எந்த மனிதனும் பாவம் செய்யமாட்டான். தேவபிள்ளைகளே, தேவ பயமே பரிசுத்தத்தில் உங்களை பூரணமாக்கும். அப். பவுல், சொல்லுகிறார், “மாம்சத்திலும், ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்” (2 கொரி. 7:1).
நினைவிற்கு:- “நான் உங்கள் தேவனாயிருக்கும்படி உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக” (லேவி. 11:45).