ஜூலை 22 – ஓய்வு!
“அவர் அவர்களை நோக்கி: வனாந்தரமான ஓரிடத்தில் தனித்துச் சற்றே இளைப்பாறும்படி போவோம் வாருங்கள் என்றார்” (மாற்கு 6:31).
இயேசு கிறிஸ்துவுக்குக்கூட ஓய்வும், இளைப்பாறுதலும் தேவையாயிருந்தன. அவர் தேவகுமாரன்தான். பிதாவினால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மேசியாதான். ஆனாலும் அவர் ஓய்வு எடுத்து இளைப்பாறினார் என்று வேதம் சொல்லுகிறது. நாலாயிரம் ஆண்டுகளாக மனுகுலத்தால் ஏங்கி, எதிர்பார்க்கப்பட்ட மேசியா உலகத்திற்கு வந்தபோது, அவருக்கு ஊழியம் செய்ய கிடைத்த ஆண்டுகள் மூன்றரை ஆண்டு காலம் மட்டுமே. அதற்குள் அவர் செய்து நிறைவேற்ற வேண்டிய பணிகளோ ஏராளமாயிருந்தன. ஜனங்களுக்கு உபதேசிக்க வேண்டியதிருந்தது. கிராமங்களையும் பட்டணங்களையும் சந்திக்க வேண்டியதிருந்தது. வியாதியஸ்தர்களை சந்திக்க வேண்டியதிருந்தது.
இயேசு சொன்னார், “பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும். ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது” (யோவான் 9:4). இயேசு பம்பரம் போல சுழன்று ஓடி ஓடி ஊழியம் செய்தார். ஆனாலும் அவர் தம் சரீரத்தை கவனிக்காமல் விட்டு விடவில்லை. “வருகிறவர்களும் போகிறவர்களும் அநேகராய் இருந்தபடியினால் போஜனம் பண்ணுகிறதற்கு அவர்களுக்கு சமயம் இல்லாதிருந்தது. அவர் அவர்களை நோக்கி: வனாந்தரமான ஓரிடத்தில் தனித்துச் சற்றே இளைப்பாறும்படி போவோம் வாருங்கள்” என்று அழைத்தார் என்று வேதம் சொல்லுகிறது.
இயேசு தனியாய் ஓய்வு எடுத்தபோது, அங்கேயும் ஜனங்கள் கூடி வந்தார்கள். ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து கூடி வந்திருந்த ஐயாயிரத்திற்கு மேற்பட்ட மக்களுக்கு புசிக்கக் கொடுத்து ஜனங்களை அனுப்பிவிட்டார். (மாற்கு 6:45). அடுத்த வசனத்தில், “அவர் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின் மேல் ஏறினார்” (மாற்கு 6:46) என்று வாசிக்கிறோம்.
ஊழியத்துக்குப் பின்னர் அவர் வனாந்தரமான இடத்திற்கு சென்று ஓய்வு எடுத்து இளைப்பாறினார். அதுதான் கெத்செமனே தோட்டமாகும். ஜெபிக்க ஜெபிக்க அவருடைய ஆத்துமாவிலே ஒரு புத்துணர்வும், ஆவியிலே ஒரு பெலனும், சரீரத்திலே ஒரு ஆரோக்கியமும் ஏற்பட்டது. ஆம் ஜெபத்தினால் வரும் புத்துணர்வை அவர் அறிந்திருந்தார்.
தன்னை மட்டும் கவனித்துக்கொண்டு, மற்றவர்களை அவர் கவனியாமல் விட்டு விடவில்லை. சீஷர்களோடுகூட உயர்ந்த மலையின்மேல் ஏறி மறுரூப மலையின் அனுபவத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். ஜெபத்தின் வல்லமையை அவர்களுக்கு காண்பித்து பயிற்றுவித்தார். அவர் சிலுவையில் தொங்குகிற நேரத்தில்கூட, அந்த வேதனையின் மத்தியிலும் மரியாளைக் குறித்து அக்கறையுடையவராக யோவானிடம் பொறுப்பாய் ஒப்புக்கொடுத்தார் (யோவான் 19:26,27).
தேவபிள்ளைகளே, உங்களுடைய ஆவி, ஆத்துமா, சரீரம் மூன்றிலேயும் ஒழுக்கத்தைக் கடைப்பிடியுங்கள். அப்பொழுதுதான் நீங்கள் தெய்வீக சுகமும், ஆரோக்கியமும் உடையவர்களாய் பூரணத்தை நோக்கி முன்னேறிச் செல்ல முடியும். கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தமாக இருக்கவும் முடியும்.
நினைவிற்கு: – “என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்” (மல்கியா 4:2).