மார்ச் 21 – நம்மைப் போலானார்!
“பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்” (எபி. 2:14).
நம்முடைய தேவன் ஆவியும் ஜீவனுமானவர். ஆவியாயும் ஜீவனுமாயிருந்த தேவன், நமக்கு இரட்சிப்பை உண்டுபண்ணும்படியாக மாம்சமும் இரத்தமுமுடையவராய் இந்த பூமியிலே பிறந்தார். இது எத்தனை பாக்கியமான ஒரு செயல்! அந்த அழிவில்லாத, நித்திய நித்தியமான தேவ குமாரன், நமக்காக அழிவுள்ள மண்ணான சரீரத்தை எடுத்து நடமாடினது எத்தனை தியாகமான செயல்!
ஜான் ஹாவார்டு கிரிஃபின் (John Howard Griffin) என்ற வெள்ளைக்காரர், கருப்பர்களான நீக்ரோக்கள்மேல் அளவில்லாத பாசமும், மிகுந்த மனதுருக்கமும் கொண்டிருந்தார். அவர் தானும் ஒரு நீக்ரோவைப்போல் இருந்தால்தான், மேய்ப்பனில்லாமல், மனம்போல அலைந்து திரிகிற நீக்ரோக்களை கர்த்தருக்கென்று ஆதாயம்பண்ண முடியும் என்று நம்பினார்.
ஆகவே அவர் மிகவும் பாடுபட்டு, தன்னுடைய வெள்ளைத் தோலை நீக்ரோவினத்தைப்போல் கறுப்புத் தோலாக மாற்றினார். அவர் அதற்காகப் பட்ட பிரயாசங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவருடைய சரீரம் முழுவதிலும் பலவகையான கொடிய மருந்து வகைகளைப் பூசவேண்டியிருந்தது. சூரிய ஒளியில் பல நாட்கள் விழுந்து கிடக்க வேண்டியிருந்தது. தார் போன்ற ஒரு வகையான கருப்பு தைலத்தை தன்மேல் பூசிக்கொள்ள வேண்டியிருந்தது.
ஒரு பக்கம், நீக்ரோக்களை சந்திப்பதற்கு அது அவருக்கு மிகப் பெரிய உதவியாய் இருந்தபோதிலும், மறுபக்கத்தில் அவர் நிறவெறி பிடித்த வெள்ளைக்காரர்களால் மிகவும் துன்புறுத்தப்பட்டார். வெள்ளைக்காரர்கள் ஓட்டும் வாகனங்களில் ஏறுவதற்கு அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. அவர் நீக்ரோ மக்கள்மேல் கொண்டிருந்த அன்பினால் எல்லாப்பாடுகளையும் பொறுமையோடு சகித்தார்.
அதுபோல, இயேசு நமக்காக மனித கோலம் பூண்டபடியினால் அவர் அனுபவித்த பாடுகளைக் கண்ணீரோடு தியானித்துப் பாருங்கள். வேதம் சொல்லுகிறது, “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது. அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” (ஏசா. 53:5).
அவர் நம்முடைய மீறுதல்களுக்காகவும், அக்கிரமங்களுக்காகவும் சவுக்குகளினால் அடிக்கப்பட்டு, முள்முடி சூட்டப்பட்டு, ஆணிகள் கடாவப்பட்டு தன்னுடைய இரத்தத்தையெல்லாம் சிந்திக் கொடுத்தார்.
வேதம் சொல்லுகிறது, “நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக் கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும் பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்” (எபி. 4:15).
தேவபிள்ளைகளே, நம்மைப்போலாகி, நமக்காக உயிரையும் தியாகம் செய்த அவருடைய நேசத்தை நீங்கள் சிந்தித்துப்பார்த்து அவரைத் துதிப்பீர்களா?
நினைவிற்கு:- “ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலை பண்ணும்படிக்கும் அப்படியானார்” (எபி. 2:15).